Politics

"கரூரில் ஈரம் காய்வதற்குள் பாஜக அரசியல் செய்கிறது" - செல்வப்பெருந்தகை விமர்சனம் !

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரூர் விவகாரத்தில் பாஜக குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு குழு அமைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஒரு ஆணைத்தை நியமித்துள்ளது. அந்த ஆணையம் நீதிபதி அருணா தலைமையில் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் முடிவு வரட்டும். பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழு உண்மையை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும். அரசியல் செய்யக் கூடாது. ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி, அரசியல் செயவதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி. அவர்கள் வந்தவுடன் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமமாலினியும், அனுராக் தாக்கூர் ஆகியோர் திமுக மீது குற்றம் சாட்டுகின்றனர். போலீஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறை இல்லையென்றால், அன்றைய தினம் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். காவல்துறையினர் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளனர். அதற்கான வீடிேயா ஆதாரங்கள் உள்ளன. காவல்துறையினர் தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டனர். பாஜக பிணத்தின் மீது அரசியல் செய்யக் கூடாது. பிணத்தின் மீது அரசியல் செய்யும் கட்சிகளை பொதுமக்கள் காரி துப்புகின்றனர்.

ஒரு பக்கம் வாக்கு திருட்டு, இன்னொரு பக்கம் பிணத்தின் மீது அரசியல். அரசியலில் அனுதாபங்கள் இருக்க வேண்டும். கரூரில் இன்றும் ஈரம் காயவில்லை. அதற்குள் அரசியல் செய்கின்றனர். அவர்கள் வீீட்டில் இது போன்று சம்பவம் நடந்தால், அரசியல் கட்சி செய்வார்களா. அவர்களின் கொடூரமான முகங்கள் தெரிகிறது.

இரவோடு இரவாக ஆணையம் அமைத்து, விமானத்தை பிடித்து கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலிலும் செலுத்திவிட்டு சென்றுள்ளார். ஏன், அமைச்சர்களை அனுப்பி வைத்து விட்டு, முதல்வர் வீட்டோடு இருந்திருக்கலாமே. ஆனால், அப்படி செய்யாமல், சம்பவம் நடந்தவுடன், துரிதமாக செயல்பட்டார். முதல்வரை பாராட்ட மனது இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும்.

கரூர் விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு ஏன் கும்பமேளாவில் நடந்த விபத்தின்போது அமைக்கப்படவில்லை. மேலும், மணிப்பூர் மாநிலத்தில் எத்தனை படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நடந்தது. அப்போது, ஏன் இந்த உண்மை கண்டறியும் குழுவை அனுப்பவில்லை "என்று கூறினார்.

Also Read: மீட்டெடுக்கப்படும் கொடுங்கையூர் குப்பை கிடங்கு: 1,500 பசுமை மரக்கன்றுகள் நட திட்டம் - சென்னை மாநகராட்சி !