Politics

"பஹல்காம் தாக்குதலை தடுக்க தவறிய அமித்ஷா பதவி விலகுவாரா? " - நாடாளுமன்றத்தில் கர்ஜித்த பிரியங்கா காந்தி !

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதில் ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்டவரை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின.

முதலில் இதனை மறுத்த ஒன்றிய அரசு, பின்னர் வேறு வழியின்றி பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விவாதம் நடத்த ஒப்புக்கொண்டது. அதன்படி இன்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, "காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஒன்றிய அரசு கூறியதை நம்பி சென்றவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலை தடுக்க ஒன்றிய அரசு தவறியது ஏன்? இந்த தாக்குதலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு ?

பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது. அங்கு ஒரு மணி நேரம் தாக்குதல் நடைபெற்றும் அந்த பகுதியில் ஒரு வீரர் கூட இல்லாதது ஏன் ? இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பின் மீது ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?

காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றபோது அதற்கு பொறுப்பேற்று அப்போதைய உள்துறை அமைச்சர் பதவி விலகினார். அப்போது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உடனே கொல்லப்பட்டார்கள். இப்போது பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்பார்கள் ? தாக்குதலை தடுக்க தவறிய அமித்ஷா பதவி விலகுவாரா ?"என்று கூறியுள்ளார்.

Also Read: “தமிழன் கங்கையை வெல்வான்! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி காரசார பேச்சு!