Politics

INDvsPAK : "தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தை நிறுத்துவேன் என கூறினேன்" - டிரம்ப் பேச்சால் சர்ச்சை !

காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கு மாறி மாறி தாக்குதல் நடத்தியதால் இந்த தாக்குதல் போராக மாறுமோ என்ற அச்சம் எழுந்தது.

இதனியையே இரு நாட்களுக்கு முன்னர் தாக்குதலை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூரவமாக அறிவித்தார். அதே நேரம் இந்த விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்றும் விளக்கமளித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபரின் தலையீடு இருந்ததா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தை நிறுத்துவேன் என இரு நாடுகளிடமும் கூறியதால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா உதவியது. தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தை நிறுத்துவேன் என இரு நாடுகளிடமும் கூறினேன். அதனைத் தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போர் நடைபெறாமல் தடுக்கப்பட்டது"என்று கூறியுள்ளார்.

Also Read: "சாதியை காரணம் காட்டி கோவில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பது தீண்டாமை"-சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!