Politics

18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த கச்சா எண்ணெயின் விலை... பெட்ரோல் - டீசல் விலையை குறைக்குமா பாஜக அரசு ?

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் வரலாறு காணாதவகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90க்கு மேல் விற்பனையாகிறது. இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்தால் சமான்ய மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இது தவிர சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் மறைமுகமாகப் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மோடி தலைமையிலான பாஜக அரசு பெட்ரோல் -டீசல் விலையை குறைக்காமல் இருந்து வருகிறது.

கடந்த சில ஆண்டாக ரஷ்யா குறைந்த விலைக்கு இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்தாலும் அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் பொதுமக்களை பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. அந்த வகையில் தற்போது, கடந்த 2008-ம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக சரிந்து ஒரு பீப்பாய் 59 டாலருக்கு விற்பனையாகிறது.

இந்த அளவு கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ள நிலையில், அதன் பலனை மக்களுக்கு ஒன்றிய அரசு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் பண வீக்கம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் - டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுந்துள்ளது.

Also Read: நிதிக்கு தொடர்பே இல்லாத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் ? -முரசொலி விமர்சனம் !