Politics
கும்பமேளா ரயில் பரிதாபங்கள் : "பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்" - செல்வப்பெருந்தகை !
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சிக்கு செல்ல போதுமான ரயில்கள் ஏற்பாடு செய்யப்படாத நிலையில், ஏராளமான பொதுமக்கள் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பயணித்ததோடு, ரயில்களையும் சேதப்படுத்தினர்.
ஆனால், இதற்கு ஒன்றிய அரசு வருத்தம் தெரிவிக்காத நிலையில், ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா மகா கும்பமேளாவிற்கு ரயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, இன்று திருச்சி விமானநிலையத்தில் பேசும் போது, 'மகா கும்பமேளாவிற்கு ரயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர்' என்று கூறியுள்ளார். இதுபோன்று பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்.
கும்பமேளாவிற்கு ரயில் சென்று வந்தவர்கள் சொல்லொண்ணா சிரமத்தை அனுபவித்தார்கள். ஒவ்வொரு ரயில்வே நிலையத்திலும் பயணிகள் ரயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பிரக்யாராஜுக்கு சென்று ரயிலில் மீண்டு வரமுடியாத நிலையில் அவர்களை விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.
தொலைதூரப் பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்து, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது ரயில்வே அமைச்சகம். நிலை இவ்வாறு இருக்கையில் பயணிகள் சிரமம் இன்றி கும்பமேளாவிற்கு சென்று வந்தார்கள் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்” : அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!
-
வெட்கமில்லாமல் அறிக்கை விடும் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
-
அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!