Politics

கும்பமேளா ரயில் பரிதாபங்கள் : "பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்" - செல்வப்பெருந்தகை !

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சிக்கு செல்ல போதுமான ரயில்கள் ஏற்பாடு செய்யப்படாத நிலையில், ஏராளமான பொதுமக்கள் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பயணித்ததோடு, ரயில்களையும் சேதப்படுத்தினர்.

ஆனால், இதற்கு ஒன்றிய அரசு வருத்தம் தெரிவிக்காத நிலையில், ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா மகா கும்பமேளாவிற்கு ரயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, இன்று திருச்சி விமானநிலையத்தில் பேசும் போது, 'மகா கும்பமேளாவிற்கு ரயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர்' என்று கூறியுள்ளார். இதுபோன்று பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்.

கும்பமேளாவிற்கு ரயில் சென்று வந்தவர்கள் சொல்லொண்ணா சிரமத்தை அனுபவித்தார்கள். ஒவ்வொரு ரயில்வே நிலையத்திலும் பயணிகள் ரயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பிரக்யாராஜுக்கு சென்று ரயிலில் மீண்டு வரமுடியாத நிலையில் அவர்களை விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

தொலைதூரப் பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்து, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது ரயில்வே அமைச்சகம். நிலை இவ்வாறு இருக்கையில் பயணிகள் சிரமம் இன்றி கும்பமேளாவிற்கு சென்று வந்தார்கள் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: “மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது வேண்டுமா?” : அடுத்தடுத்த மிரட்டல் விடும் டெல்லி பா.ஜ.க முதல்வர் ரேகா!