Politics

“ஒன்றிய அரசால் ஒரு விமானம் கூடவா அனுப்ப முடியவில்லை?” : தி.மு.க எம்.பி எம்.எம்.அப்துல்லா கண்டனம்!

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு முகம் சுழிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்டை நாடுகளுடன் பொருளாதார போர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை, ஐ.நா.வுடன் முரண் என டிரம்ப் முன்னெடுப்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

அதுபோன்ற முகம் சுழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியர்களை நாடு கடத்திய நிலையும் அமைந்துள்ளது. சுமார் 40 மணிநேரம் விலங்குகளுடன் இந்தியா அழைத்துவரப்பட்ட இந்தியர்களை கண்டு, ஒட்டுமொத்த நாடே கொதித்தெழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதை முன்கூட்டியே அறிந்தும் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இது குறித்து தி.மு.க எம்.பி எம்.எம்.அப்துல்லா தனது X சமூக வலைதளத்தில், “அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைகளில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் நாடு கடத்திவரப்பட்டிருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்துகிறது. காரணம் என்னவாக இருந்தாலும், அடிப்படை மனிதநேயம் கூட இல்லாமல் இந்தியர்களை நடத்திய இந்தச் செயல் கண்டனத்துக்குரியது.

உலகின் சக்திவாய்ந்த தலைவர் என்று தற்புகழ் பாடும் மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமராக இருக்கும்போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. எனில், அவரின் சக்தி தான் என்ன? முன்பே தகவல் தெரிந்தும், நம் மக்களை மரியதையாக அழைத்துவர ஒன்றிய அரசால் ஒரு விமானம் கூடவா அனுப்ப முடியவில்லை?

விலங்குகள் போல இந்தியர்கள் நடத்தப்பட்ட இந்த சம்பவம், இந்தியாவின் தன்மானத்துக்கும் சுயமரியாதைக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். இனியாவது ஒன்றிய அரசு விழித்துக்கொண்டு இந்தியர்களின் மரியாதையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.3,800 கோடி முதலீடு : டாடா குழுமத்தின் உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!