Politics

"நமது அரசின் மக்கள் நல திட்டங்களால் நம் எதிரிகளுக்கு நம்மை பார்த்தாலே பயம் இருக்கும்"- கனிமொழி MP!

சென்னை தியாகராயநகரில் திமுக 133வது வட்டத்தின் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு 2000 பேருக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எம்.பி.கனிமொழி, " நம் எதிரிகள் தான் நம்மை அழிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அவையெல்லாம் நிச்சயம் நடக்காது. பேரறிஞர் அண்ணா வழியில், தந்தை பெரியார் வழியில், கலைஞர் வழியில், அண்ணன் தளபதி வழியில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம், படிக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் , என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆகையால் நம் எதிரிகளுக்கு நம்மை பார்த்தாலே பயம் இருக்கத்தான் செய்யும். இந்த பொங்கல் நன்னாளில் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் நமக்குத் தேவையில்லை.

இன்று நான் வரும் வழியெங்கும் பார்த்தேன் அனைவரும் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து கண்களில் கண்ணீரோடு மகிழ்ச்சி பொங்க வரவேற்றார்கள், ஆனால் அவர்கள் கண்களில் கண்ணீர் வந்ததற்கு காரணம் அந்த விறகடுப்பில் வந்த புகைதான். இதைத்தான் தலைவர் கலைஞர் அன்றே கணித்து பெண்களின் கண்களில் இனி புகையால் கூட கண்ணீர் வரக்கூடாது என்பதற்காக விலையில்லா கேஸ் அடுப்பை வழங்கினார்.

இங்கு எல்லா ஜாதிகளுக்கும் எல்லா மதங்களுக்கும் என தனி தனி பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது ஆனால் ஜாதி மத பேதமின்றி சமத்துவமாய் கொண்டாடப்படும் ஒரே விழா நம் பொங்கல் திருவிழா தான். அந்த வகையில் இந்த மகிழ்ச்சியான நன்னாளில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்று இருப்பது மேலும் பெருமையாக உள்ளது. இந்த விழாவை இத்தனை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

Also Read: "நடிகர் விஐயை வீட்டில் இருந்தே அறிக்கையை கொடுக்க சொல்லுங்கள்" - அமைச்சர் சேகர் பாபு கிண்டல் !