Politics

சட்டப்பேரவையை திட்டமிட்டு புறக்கணிக்கிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? : தொடரும் ஆளுநரின் முரண்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில், நடப்பாண்டின் சட்டப்பேரவையின் முதல் நாளிலும் அரசின் உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்ற வழக்கமான முறைக்கு எதிராக, திராவிட மாடல் எதிர்ப்பாளராக இருந்து தனது புறக்கணிப்பை தொடர்ந்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

கடந்த ஆண்டுகளின் ஆளுநர் உரைகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை வாசிக்க மறுத்துவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நடப்பாண்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடியதற்காக அரசின் முழு உரையையும் வாசிக்காமல் புறக்கணித்து சென்றார்.

இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ““மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு, மாற்று அரசாங்கத்தை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி துடிக்கிறார். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து CPIM மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், “தமிழ்நாடு அரசின் மரபுப்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியும், இறுதியில் தேசிய கீதம் பாடியும் முடிக்கப்படும். ஆனால் இத்தகைய மரபை மதிக்காமல் அரசியல் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின் இந்த அடாவடி போக்கு கண்டிக்கத்தக்கது. ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் வாசிக்க வேண்டிய அரசின் உரையை, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

Also Read: வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம் : முரசொலி தலையங்கம் பாராட்டு!