Politics

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : மூன்றாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற அவைகள் கூடுவதும் உடனடியாக ஒத்திவைக்கப்படுவதும், ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய நடைமுறையாக மாறியுள்ளது.

பிரதமர் மோடிக்கு நெருங்கியவரான அதானி மீது கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் நாடாளுமன்றத்தில் எழும் போது அதனை புறக்கணித்து, நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைக்கும் பா.ஜ.க.வின் போக்கு, உழைக்கும் வகுப்பினர் மீதான சுரண்டல்களை ஊக்குவிக்கும் போக்காக அமைந்துள்ளது.

நாட்டில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதை புறக்கணிப்பதும், புதிதான வஞ்சிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதுமே நாடாளுமன்ற நடைமுறை என்கிற அளவிற்கு ஒன்றிய பா.ஜ.க அரசின் செயல்கள் அமைந்துள்ளன.

அவ்வகையில் தான், இன்றைய (நவம்பர் 28) நாள் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய போது, அதானி ஊழல், மணிப்பூர் வன்முறை உள்ளிட்டவை குறித்து விவாதம் தேவை என எதிர்க்கட்சிகள் முழங்கிய வேளையில், அதனை புறக்கணித்து நாள் முழுக்க நாடாளுமன்ற இரு அவைகளையும் ஒத்திவைத்தனர் ஒன்றிய அரசின் நிகராளிகள்.

இந்த புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய நாடாளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது. இதனால், இந்திய அரசியலமைப்பின் 75ஆம் ஆண்டு கொண்டாடுகிற சூழலிலும் அடக்குமுறை அரசியல் துவளாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என பல அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Also Read: சென்னையின் 245 பள்ளிகளில் 980 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்! : சென்னை மாநகராட்சி தீர்மானம்!