Politics
“இனி ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு இல்லை...” - பாஜக கூட்டணியில் இருந்து விலகி நவீன் பட்நாயக் அதிரடி !
நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்த சூழலில் முன்பு பாஜக கூட்டணியில் இருந்த ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், இனி ஒருபோதும் பாஜகவுக்கு தாங்கள் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. தொடர்ந்து அந்த தேர்தல்களில் வெற்றி பெற்று, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியை பிடித்தார். இந்த சூழலில் பாஜகவுக்கு தற்போது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதை பிஜு ஜனதா தளம் அறிந்து, கூட்டணியில் இருந்து விலக முற்பட்டது.
குறிப்பாக அண்டை மாநிலமான மணிப்பூர் கலவரம் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், சட்டப்பேரவை மற்றும் மக்களவை ஆகிய இரு தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணியை முறித்தது பிஜு ஜனதா தளம். இதனால் தேர்தலை தனித்து களம் கண்ட பாஜக, இந்த தேர்தலில் ஒடிசாவில் பெருமளவு வெற்றி பெற்றது.
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜகவும், 1 தொகுதியை காங்கிரஸும் பிடித்தது. இந்த முறை மக்களவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் வரலாறு காணாத அளவு படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பாஜக மீது தற்போது பிஜு ஜனதா தளம் கடும் அதிருப்தியில் உள்ளது.
இந்த நிலையில், இனி ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்று அக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இன்று அக்கட்சியின் 9 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் நவீன் பட்நாயக் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது ஒடிசா மாநிலத்துக்கு தேவையானவையை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என்றால், தங்கள் குரல்களை ஓங்கி எழுப்ப வேண்டும் என்று நவீன் அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக மாநிலத்துக்கு தேவையானவை, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவை நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை தற்போது ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் தங்கள் போராட்டத்தை தொடங்குவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. முன்பு இருந்தது போல் இனி ஒருகாலமும் பாஜகவுக்கு தாங்கள் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!