Politics

“பாஜக வரவேற்கும்” : நேரலையில் நிர்மலா சீதாராமன் அளித்த ஒப்புதல்... அம்பலமான பாஜக வாஷிங் மெஷின் !

பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்து ஒன்றிய பாஜக அரசு தங்கள் அதிகாரத்தை வரையறையின்றி கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என அரசின் அமைப்புகளை அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. தொடர்ந்து இதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலரது வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதோடு, அவர்களை மிரட்டி பாஜகவில் இணைத்துள்ளது. இவ்வாறு மற்ற அரசியல் கட்சிகளில் இருக்கும் முக்கிய நபர்களை தேர்ந்தெடுத்து, பாஜக மிரட்டி தனது பக்கம் இழுத்து வருகிறது. அப்படி அடிபணியாத ஆட்களை கைது செய்து தொல்லைகொடுத்து வருகிறது.

இதனாலே பாஜக அரசை எதிர்க்கட்சிகள் பாசிச அரசு என விமர்சனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து கண்டனங்கள் போராட்டங்கள் என எழுந்த நிலையில் கூட, பாஜக அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருந்து வருகிறது. அதே போல் ஊழல்வாதி, கொலை குற்றவாளி, பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பயங்கரவாதி என யார் மீதெல்லாம் குற்றங்கள் சுமத்த படுகிறதோ, அவர்கள் எல்லாம் பாஜகவில் இணைந்தால் அது நீக்கப்பட்டு விடுகிறது.

இவ்வாறாக பலரும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல முக்கிய உறுப்பினர்கள் வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர். யாரெல்லாம் பாஜகவில் இணைந்தார்களோ, அவர்கள் எல்லாம் தற்போது புனிதராகி விடுகிறார்கள். அவர்கள் மீதுள்ள வழக்குகள் எல்லாம் மாயமாகி விடுகின்றன.

இதனையே மோடி வாஷிங் பவுடர் மற்றும் மெஷின் என எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சூழலில் தங்கள் கட்சி அனைத்து குற்றவாளிகளையும் பாஜக வரவேற்கும் என்று தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நெறியாளர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது நெறியாளர், கறைபடிந்த தலைவர்கள் பாஜகவில் சேர்வதற்கு தடை இல்லையா? அவர்களுக்கும் கூட பாஜக சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்குமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், அனைவரும் இந்த கட்சியின் கதவு திறந்திருக்கும் என்றார். மீண்டும் 9 சிபிஐ வழக்குகள் இருக்கும் ஒருவரையும் பாஜக வரவேற்குமா? என்று நெறியாளர் கேட்டபோது, “அனைவரையும் எங்கள் கட்சி வரவேற்கும்” என்றார்.

இதன் மூலம் ஊழல் குற்றவாளிகள், கொலை, கொள்ளை குற்றவாளிகள் என அனைவரும் பாஜகவில் இணைந்த பிறகு, அவர்கள் சுத்தமுள்ளவர்களாக மாறி விடுகிறார்கள். நேற்று கூட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, மோடி வாஷிங் மெஷின், பவுடர் உள்ளிட்டவை காண்பித்து விமர்சித்துள்ளார். மேலும் கொலை, ஊழல், கொள்ளை, வன்கொடுமை, பயங்கரவாதிகள் உள்ளிட்ட குற்றங்களை டி-ஷர்ட்டில் எழுதி, அதனை வாஷிங் மெஷின் ஒன்றில் போட்டு, அதில் மோடி வாஷிங் பவுடரை வைத்து சுத்தம் செய்தால், 'பாஜக மோடி வாஷ்' என சுத்தமாக வெளியே வருகிறது என்றும் விமர்சித்தார்.

Also Read: RSS நிர்வாகி வீட்டில் 770 கிலோ வெடிப்பொருட்கள்... : போலிஸார் சோதனையில் ஷாக் - கேரளாவில் பரபரப்பு !