Politics

ஒன்றிய அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய பாஜகவினர்... சொந்த தொகுதிக்கு சென்றபோது அவலம் ! | VIDEO

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மிகவும் மும்முரமாக இருக்கின்றனர். அந்த வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள எம்.பி-க்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் தொகுதியில் பல பணிகளை நேரில் சென்று மேற்கொண்டு வருகின்றனர். அப்படி ஒரு எம்.பி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தொகுதிக்கு சென்ற நிலையில், அந்த தொகுதி மக்கள் அவருக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது பேகுசராய் தொகுதி. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட கிரிராஜ் சிங் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக ஆனார். இவர் தற்போது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அமைச்சரவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த சூழலில் இவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்க சென்றார். அப்போது இவருக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் பாஜகவினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவே தொகுதிக்கு வருவதாக மக்கள் ஆவேசப்பட்டு முழக்கத்தலும் ஈடுபட்டனர்.

அதாவது பராவ்னி பால் பண்ணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, கிரிராஜ் சிங் பச்வாடாவில் நடைபெறும் கூட்டு தொடக்க விழா மற்றும் தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில் பாஜக கொடி மற்றும் கருப்புக்கொடி ஆகியவற்றை கையில் ஏந்திக்கொண்டு பாஜகவினர், ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு எதிராக கோஷமிட்டு வெளியேற வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் CPI கட்சி ஆதரவாளர்களும் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கே சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பெகுசராய் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெப்சி ஆலையில் வேலை தேடும் இளைஞர்கள், நபர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்றும், கிரிராஜ் சிங்கிற்கு லஞ்சமாக ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை கொடுத்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஒரு ஒன்றிய அமைச்சருக்கே அவர் சார்ந்த தொகுதியில் பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டி, வெளியேறுமாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளையும் பெற்று வருகிறது.

Also Read: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையர் ராஜினாமா : எழுந்த புதிய சர்ச்சை... விவரம் என்ன ?