Politics
வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்கு 1.5லட்சம், மாநில அரசின் பங்கு 7 லட்சம்- அமைச்சர் விளக்கம்!
நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 19-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நேற்றும், இன்றும் (21,22) நடைபெற்றது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அந்தந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர்.
அப்போது கேள்வி நேரத்தில் பதிலளித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.5 இலட்சம். ஆனால், மாநில அரசின் பங்கோ 7 இலட்சம் என தெரிவித்தார்
இதுகுறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, “பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் (கிராமம்) ஒரு அலகின் விலை ரூ.1.2 இலட்சம். இதில், ரூ.72,000 ஒன்றிய அரசின் பங்கு, ரூ.48,000 மாநிலத்தின் பங்கு. கிராமங்களில் இத்தொகை போதவில்லை என்று தமிழ்நாடு அரசு ‘Additional Roofing Cost’ எனக் கூடுதலாக ரூ.1.2 இலட்சம் வீடொன்றிற்கு வழங்கி வருகிறது. ஆக மொத்தம், ஒரு வீட்டிற்கு 2.4 இலட்சம் ரூபாயில், ஒன்றிய அரசின் பங்கு 72,000 ரூபாய், மாநில அரசின் பங்கு 1,68,000 ரூபாய் ஆகும்.
இந்த திட்டத்திற்கு வெறும் 30 சதவீதம் மட்டுமே கொடுத்துவிட்டு, திட்டத்திற்குப் பெயர் ’பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா‘ என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். நாட்டிலேயே முதன்முறையாக, ஆதி திராவிடர்களுக்கு கான்க்ரீட் வீடு வழங்கியது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். அதுமட்டுமல்ல, 1970ஆம் ஆண்டில் முதன்முறையாக குடிசைமாற்று வாரியத்தை அமைத்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார். 14 வருடங்கள் கழித்து தந்தையின் கனவை இன்று மகன் நிறைவேற்றுகிறார்.
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஒன்றிய அரசால் வழங்கப்படும் தொகை போதாது என்றுதான், ஏழை எளிய மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, ’கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், வீடு ஒன்றிற்கு ரூ.3.5 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசு நிதியிலிருந்தே செயல்படுத்தப்படும். இது மட்டுமன்றி, அரசு ஏற்கனவே கட்டித்தந்த 2.5 இலட்சம் பழைய வீடுகளைப் பராமரிப்பதற்காக ரூ.2,000 கோடி நிதியை அறிவித்துள்ளது.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திற்கு (நகர்ப்புரம்) ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.5 இலட்சம். ஆனால், மாநில அரசின் பங்கோ ரூ.7 இலட்சம். ஒன்றிய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசுதான் பெருமளவில் நிதி பங்களிக்கிறது.” என்றார்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”