Politics

"கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்" - நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்த திமுக !

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

எனினும் ஒன்றிய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கு அவசர நிலை காலகட்டத்தின்போது, ஒன்றிய பட்டியலுக்கு சென்ற கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே தீர்வாக பார்க்கப்படுகிறது.

திமுக சார்பில் பல்வேறு முறை இதுகுறித்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், அங்கும் திமுக சார்பில் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி செந்தில் குமார், " முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். அதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடிந்தது. இன்று நீட் தேர்வு கொண்டு வந்ததன் மூலம் பல லட்ச ரூபாய் பணம் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடிகிறது.

ஒரு சதவீதம் மதிப்பெண் பெற்றால் கூட இன்று தனியார் கல்லூரிகளில் 20 லட்சத்திற்கு மேல் பணம் கொடுத்து சேரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் உடைகளை சோதனை செய்வதன் மூலம் தீவிரவாதிகள் போல் நடத்தப்படுகிறார்கள். மாணவர்களை கண்ணியத்துடன் பணிவுடன் நடத்தப்பட வேண்டும்.