Politics

"ஒன்றிய அரசு செய்ததாக கூறிய சாதனைகளை பொருளாதார நிபுணர்கள் நிராகரித்துள்ளனர்" - ப.சிதம்பரம் விமர்சனம் !

இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், ஒன்றிய பாஜக அரசின் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யபடும் இறுதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் என்றாலும் தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மாநிலங்களில் இருந்து பிடுங்கப்படும் நேரடி வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில், அதற்கு ஏற்ப திட்டங்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 3 நாட்களாக ஒன்றிய அரசு தெரிவித்த சாதனைகளை எல்லாம் பொருளாதார நிபுணர்கள் நிராகரித்துள்ளனர் எனக் கூறியுள்ளார். ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ப.சிதம்பரம், "குடியரசுத் தலைவர் உரையிலும் பட்ஜெட் உரையிலுமாக கடந்த 3 நாட்களாக ஒன்றிய அரசு தெரிவித்த சாதனைகளை எல்லாம் பொருளாதார நிபுணர்கள் நிராகரித்துள்ளனர்.

வருமான வரி செலுத்துவோர் பழைய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமா புதிய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும். ஏன் அனைவரும் புதிய வருமான வரி திட்டத்திற்குள் செல்ல வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது?

பாஜக ஆட்சியில் கூட்டாட்சி நடைமுறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. பணம் படைத்தவர்களுக்கான அரசாக மட்டுமே பாஜக அரசு செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்கள் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் காலியாக கிடைக்கிறது. கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் 32,771 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அது குறித்து நிர்மலா சீதாராமன் எதுவும் தெரிவிக்கவில்லை, இளைஞர்கள் குறித்து பேசும் பிரதமர் வேலை வாய்ப்பு குறித்து பேசவில்லை" என்று விமர்சித்தார்.

Also Read: கட்சிகளுடன் தொடர்பிருப்பதாக ஒப்புக்கொள்ள கூறி சித்ரவதை : நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளிகள் புகார் !