Politics

நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு : காங்கிரஸ் வசமாகும் கர்நாடகா, தெலங்கானா.. பரிதாப நிலையில் பாஜக !

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.

135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வந்தது.

அதே போல அதனை தொடர்ந்து நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கும் அதிகமாக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா, தெலங்கானாவில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து Lok Poll அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 12 முதல் 14 இடங்களில் வெற்றிபெறும் என்றும், பாஜகவுக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 1 முதல் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 25 இடங்களில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 10 இடங்கள் கிடைக்கும் என்றும், பிஆர்எஸ் கட்சிக்கு 3 முதல் 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடங்களும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கானாவில் பாஜக 4 இடங்களில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ராமர் கோவில் கும்பாபிஷேகம் : கிறிஸ்தவ தேவாலயத்தின் சிலுவையில் காவி கொடியை ஏற்றிய இந்துத்துவ கும்பல் !