Politics
"அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை"- உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !
தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதனிடையே ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாம் நீதிபதி ஜாமீனுக்கு மறுப்பு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பு தெரிவித்தார்.
அதோடு, தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார். பின்னர் இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. சட்ட ரீதியாக இதனை நாங்கள் சந்திப்போம்" என தெரிவித்திருந்தார். இதனால் தனது முடிவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தில் இது குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகள், ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு சரியானதே, அமைச்சர்கள் விவகாரத்தில் முதலமைச்சரே முடிவெடுக்கலாம். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு தடையில்லை" என்று உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
ராகுல் காந்தியின் வாகனங்களைத் தடுத்த பாஜக குண்டர்கள் - செல்வப்பெருந்தகை கண்டனம் !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : எந்தெந்த இடங்கள்... விவரம் உள்ளே !
-
காவலர் நாள் விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்ற காவலர்கள்!
-
‘மணலி-எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு மன்றம்’ & ‘தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளை’ தொடக்கம்!
-
”கண்ணாடி பாலம் பாதுகாப்பாகவும் உறுதியுடனும் உள்ளது" : அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!