Politics

”கைது செய்வதாக என்னை மிரட்ட பார்க்கிறது பாஜக”: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகும் படிசம்மன் அனுப்பி இருந்தது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளே தெரிவித்தனர். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "எனக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது சட்டவிரோதமானது. நான் எந்த ஊழலும் செய்யவில்லை. ஒன்றிய பா.ஜ.க அரசின் நோக்கம் என்னிடம் விசாரணை நடத்துவது அல்ல. என்னைக் கைது செய்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதே பா.ஜ.கவின் நோக்கமாக உள்ளது.

புதிய மதுபானக் கொள்கை வழக்கில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை. இந்த வழக்கில் பல இடங்களில் சோதனை நடத்திய பிறகும் கூட ஊழல் நடந்ததாக ஒரு பைசா கூட கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் போலியான ஒரு வழக்கைப் போட்டு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பலரை ஒன்றிய அரசு சிறையில் அடைத்து வைத்துள்ளது.

பா.ஜ.கவை எதிர்க்கும் காரணத்தால் எதிர்க்கட்சிகள் மீது ED மற்றும் CBI வழக்குகள் போடப்படுகின்றன. எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பா.ஜ.கவில் இணைந்தால் இந்த வழக்குகளிலிருந்து விடுபடலாம் என்பதே அவர்கள் மனப்பான்மையாக இருக்கிறது. புதிய மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மணிப்பூர் டு மஹாராஷ்டிரா: 6700 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி- வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு!