Politics

நேற்று பத்திரிகையாளர்கள் இன்று ஆம் ஆத்மி கட்சி MP : டெல்லியில் தொடரும் ஒன்றிய அரசின் ரெய்டு வேட்டை!

டெல்லியில் தலைமை இடமாகக் கொண்டு News Click என்ற இணைய தளம் செயல்பட்டு வருகிறது. இந்த செய்தி இணைய தளத்தின் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் வீடுகளில் நேற்று அதிகாலையில் இருந்தே டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு ரெய்டு செய்தது. மேலும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் காலையிலிருந்து நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு News Click இணையதள செய்தி நிறுவனத்துக்குச் சீல் வைத்துள்ளனர். இதையடுத்து அதன் உரிமையாளர்கள் பிரபீர் புர்காயஸ்தா, அமித் சக்கரவர்த்தி ஆகியோரை டெல்லி போலிஸார் கைது செய்தனர்.

ஊடகத்தின் குரல்வளையை நசுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு இந்தியா கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சக பத்திரிக்கையாளர்களும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையில் அமலாக்கத்துறையினர் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது என தெரியவந்துள்ளது.

இந்த சோதனைக்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரீனா குப்த, "சஞ்சய் சிங் தொடர்ந்து பிரதமர் மோடியையும், தொழிலதிபர் அதானியையும் கேள்விக்கு உள்ளாக்கினார். அதன் விளைவுதான் இன்று அவரது வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. முன்பு நடந்த சோதனைகளில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்றும் எதுவும் கிடைக்காது" என தெரிவித்துள்ளார்.

Also Read: காலையில் இருந்து ரெய்டு.. பாஜகவை விமர்சித்த NEWSCLICK ஊடகத்துக்கு சீல் வைத்த டெல்லி போலிஸ்!