Politics

“எனது பிணம் கூட பாஜகவுக்கு செல்லாது” - குமாரசாமியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா !

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலில் பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், சித்தராமையா தங்கள் கட்சியில் இருக்கும்போது அதிலிருந்து விலகி பாஜகவுக்குச் செல்ல முயன்றதாகவும், அதற்காக பாஜக தலைவா்களை சந்தித்ததாகவும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

அதே நேரம் எனது பிணம் கூட பாஜகவுக்கு செல்லாது என குமாரசாமியின் விமர்சனத்துக்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ”மதச்சாா்பின்மை என்பதுதான் எனது அரசியல். அதற்காக வாழ்நாள் முழுவதும் நான் போராடியுள்ளேன். எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜகவின் ஒருசில தலைவா்களை நான் சந்தித்திருக்கிறேன்.

சமூபத்தில் கூட அமித் ஷாவைச் சந்தித்தேன். அதற்காக பாஜகவில் சேர முயற்சித்தேன் என்றாகுமா? எனது பிணம் கூட பாஜகவுக்கு செல்லாது. சோசலிச கட்சி காலத்தில் இருந்து மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதுதான் எனது அரசியல் பயணம். ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மதவாத சக்திகளுடன் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியுள்ளார்.