Politics

சனாதனம் : “நா கோயிலுக்கு வெளியே இருந்தே பூஜை செய்தேன்..” - கர்நாடக முதல்வர் சித்தராமையா பகிர்வு !

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்துக்கு எதிராக பேசியிருப்பார். ஆனால் இதனை பாஜக கும்பல் திரித்து பொய் செய்தி பரப்பி வந்தது. இதையடுத்து பொய் செய்தி பரப்பி வந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்தது.

சாதி வேறுபாட்டை தூக்கி பிடிக்கும் சனாதனத்துக்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரவை தெரிவித்து வருகிறது. பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் சமம் என்று எடுத்துரைத்த உதயநிதியின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் இருந்து வெற்றிமாறன், பா ரஞ்சித் என பலரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தனது கருத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி வரும் பாஜக கும்பலுக்கு, 'மன்னிப்பு லாம் கேக்க முடியாது.. எதுவானாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்..' என்று தரமாக பதிலடி உதயநிதி கொடுத்துள்ளார். இந்த சூழலில் தற்போது கடவுள் முன் அனைவரும் சமம், சனாதனம் குறித்து எதிர்வினையாற்றுங்கள் என ஒன்றிய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி கூறுவது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் 169-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையில் நேற்று பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "கேரளாவில் உள்ள பிரபலமான கோயில் ஒன்றுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள் எனது சட்டையை கழற்றி விட்டு அங்கவஸ்தரம் அணிந்து செல்ல சொன்னார்கள்.

அப்போதே நான் கோயிலுக்குள் நுழைய வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதனாலே நான் கோயிலுக்குள் செல்ல மறுத்து வெளியில் இருந்தே பூஜை செய்தேன். அந்த கோயிலில் எல்லாரையும் சட்டையை கழற்ற சொல்லவில்லை. குறிப்பிட்ட நபர்களை மட்டுமே சட்டையை கழற்றிவிட்டு உள்ளே செல்லுமாறு கூறினார்கள். இது ஒரு மனிதாபிமானமற்ற செயல். கடவுள் முன் நாம் அனைவரும் சமம்தான்" என்றார்.