Politics

50-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய டெல்லி கலவரம்.. வன்முறைக்கு காரணமானவருக்கு பாஜகவில் துணை தலைவர் பதவி !

கடந்த 2020-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது.

சுமார் 32 மணிநேரம் நீடித்த இந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், இந்துத்வ கும்பலால் வடகிழக்கு டெல்லியின் முக்கால்வாசி பகுதி சூறையாடப்பட்ட நிலையில், இஸ்லாமியர்களின் இருப்பிடம், மசூதிகள், தர்ஹாக்கள் உள்ளிட்டவை குறிவைத்து இந்துத்வ வெறியர்களால் சூறையாடப்பட்டது.

டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து நிலையில், இந்த வன்முறையை பாஜக தூண்டிவிட்டதாகவும் அதிலும், பாஜக தலைவர் கபில் மிஸ்ரா என்பவர் இந்த கலவரத்தின் முக்கிய காரணமாக இருந்ததாகவும் தொடர் புகார்கள் எழுந்தன.

அதிலும், கபில் மிஸ்ராவின் மதவாதத்தை தூண்டும் பதிவுகள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், டெல்லி கலவரத்துக்கு முக்கிய காரணமாக இருந்த கபில் மிஸ்ரா டெல்லி பாஜகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வெறுப்பை தூண்டும் பதிவுக்காக தேர்தல் ஆணையத்தால் கண்டிக்கப்பட்ட ஒருவருக்கு பாஜக முக்கிய பதவியை அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாஜகவின் ஆசியோடுதான் அவர் இந்த செயலில் ஈடுபட்டதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Also Read: மணிப்பூர் : கனிமொழி MPயை வைத்து பொய் செய்தி பரப்பிய பாஜக கும்பல்.. - ஆதாரத்துடன் அம்பலபடுத்திய Youturn !