Politics

”பேசவே அஞ்சும் பிரதமர் மோடி மீது இந்தியாவுக்கு எப்படி நம்பிக்கை வரும்?”.. கபில் சிபல் விமர்சனம்!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. 90 நாட்களுக்கு மேலாகியும் இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.

மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்நிலையில், வன்முறை தொடங்கிய அடுத்த நாளான மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் குக்கி இன பெண்களுக்குப் பல கொடூரங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இம்பாலில் 2 பழங்குடியின இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு நாளும் மணிப்பூர் கொடூரம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் இந்தியா கூட்டணி பெயரை விமர்சித்து வருகிறார்.

இதனால் அவையில் மோடி பேசியே தீரவேண்டும் என முடிவு செய்து ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அசாம் மாநில காங்கிரஸ் MP கௌரவ் கோகோய் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நம்பிக்கையில்லாத பிரதமர்மீது எப்படி இந்தியாவிற்கு நம்பிக்கை வரும் என கபில் சிபல் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "நாடாளுமன்றத்தில் உரையளிக்க பிரதமர் நம்பிக்கை இழக்கும்போதும், மணிப்பூர் பெண்கள் மீதான குற்றங்களை பற்றி உச்சநீதிமன்றம் பேசும் வரை மவுனம் காக்கும்போதும் பிரிஜ் பூஷன் குறித்தும் மவுனம் காக்கும்போதும் சீனாவால் எந்தப் பகுதியும் ஆக்கிரமிக்கவில்லை என பேசும்போதும் I.N.D.I.A-வுக்கு எப்படி அவர் மீது நம்பிக்கை வரும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: ”மணிப்பூர் கலவரத்தை அடக்கத்தான் துப்பில்லை அதுபற்றி பேச கூடவா துப்பில்லை?”.. ஒன்றிய அரசை சாடிய முரசொலி!