Politics

பாஜகவின் அரசியலால் அதிருப்தி.. ஷிண்டே தரப்பு சிவசேனா MLA-க்கள் போர்க்கொடி.. மராட்டிய அரசியலில் பரபரப்பு !

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஷிண்டே தரப்பு சிவசேனாவுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை கண்டித்து ஷிண்டே தரப்பு பல விமர்சனங்களை வைத்த நிலையில், தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்ததை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும், பாஜக -ஷிண்டே தரப்பு சிவசேனா கூட்டணி அரசில் ஷிண்டே தரப்பு சிவசேனா எம்.எல்.எக்களில் சிலருக்கு அமைச்சர் பதவி தருவதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது அஜித் பவார் தலைமையில் வந்த எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், ஷிண்டே தரப்பு எம்.எல்.எஏக்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் , ஷிண்டே தரப்பு சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 15 பேர் மீண்டும் உத்தவ் தாக்கரேயிடம் செல்வது குறித்தும் ஆலோசித்துவருவதாகவும் கூறப்படும் தகவல் மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஹர் ஹர் மகாதேவ்” எனக் கூறி தலைமையாசிரியரை விரட்டி தாக்கிய இந்துத்துவ கும்பல்.. மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி