Politics
சீனாவுக்கு மாற்று இந்தியா: உலகின் உற்பத்தி மையமாக மாறும் தமிழ்நாடு.. செய்தி வெளியிட்ட வால்ஸ்ட்ரீட் ஜர்னல்
அண்மைக்காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் கடுமையாகி வரும் நிலையில், சர்வதேச வர்த்தகம் குறித்து சிறப்புக் கட்டுரை ஒன்றை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச வர்த்தகப் போட்டி காரணமாக சீனாவில் இயங்கி வரும் பல நிறுவனங்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளதாகவும், பல நிறுவனங்கள் வியட்நாம், தாய்லாந்து, மெக்சிகோ, மலேசியாவுக்கு தங்கள் தொழிற்சாலைகளை மாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மெக்சிகோ, வியட்நாமை விட அதிக தொழிலாளர்கள், பெரிய சந்தையை கொண்டுள்ள இந்தியாவின் பக்கமும் பல நிறுவனங்கள் பார்வையை திருப்பி உள்ளதாகவும், சீனாவுக்கு மாற்றாக இந்தியாவையும் ஒரு தொழில் உற்பத்தி தளமாக மாற்ற சர்வதேச நிறுவனங்கள் முனைந்துள்ளதாகவும், சர்வதேச நிறுவனங்கள் தமது பொருட்களை உற்பத்தி செய்ய சீனாவை மட்டுமே சார்ந்திருக்க விரும்பவில்லை என்றும் அக்கட்டுரை சுட்டிக்காட்டி உள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தமிழ்நாட்டையே பல நிறுவனங்கள் நாடி வருவதாகவும் தெரிவித்துள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல், தற்போது டென்மார்க்கின் வெஸ்டாஸ், காற்றாலை இறக்கை தயாரிக்கும் ஆலையை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவி உள்ளதையும், சூரிய மின்கல தகடுகள், காலணிகள், பொம்மைகள், காற்றாலை சூழலிகள் தயாரிக்கும் சர்வதேச நிறுவனங்களும் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளது.
ஐபோன், ஐபாட் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் தமிழ்நாட்டை தனது உற்பத்தி தளமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதையும், ஆப்பிள் தனது மொத்த ஐபோன் உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதையும், பாக்ஸ்கான், பெகட்ரான் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐபோனை ஸ்ரீபெரும்புதூரில் தயாரித்து வழங்கி வருவதையும் இக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூரில் கார் தொழிற்சாலைகளும், இதர தொழில்களும் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி உள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல், சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், தமிழ்நாட்டின் தொழில்வளத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தெரிவித்துள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!