Politics

தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றமே கிடையாது, பாஜக பொய்யை பரப்புகிறது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

அதோடு பல்வேறு காரணங்களால் வேறு மதத்துக்கு மாறும் மக்களை கட்டாய படுத்தி மதம் மாற்றுவதாகவும் நீண்ட நாள் கூறி வருகிறது. அதோடு இந்தியாவில் பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தையும் அமல்படுத்தி உள்ளது.

அதோடு நிற்காமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என, பா.ஜ.க. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் 3 இடங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுதாரர் கூறுவது பொய்யான தகவல் என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாணவி லாவண்யா உயிரிழப்பு தனிப்பட்ட நிகழ்வு, அதனை மதமாற்றம் என்று கூறுவது தவறானது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

மேலேயும், மனுதாரர் ஏற்கனவே தேசவிரோத குற்றச்சாட்டுக்கு ஆளானதையும், இதே கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததையும் பதில் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு, மத ரீதியில் தூண்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Also Read: மீண்டும் வெளிப்பட்ட இரட்டை வேடம் .. கர்நாடகாவில் தேர்தலில் இலவச வாக்குறுத்தைகளை அள்ளிவீசிய பாஜக !