Politics

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவில் கலவரம் ஏற்படும் - ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பகிரங்க மிரட்டல் !

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.

தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் அங்கு ஆட்சியை தக்கவைக்க பாஜக தலைவர்கள் கர்நாடகாவில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பாகல்கோட் மாவட்டம், தோ்தல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் ” காங்கிரஸ் கா்நாடகத்தின் வளா்ச்சியை பின்நோக்கி நகா்த்திவிடும். புதிய கா்நாடகத்தைக் கட்டமைக்கும் பணியை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும். கா்நாடகத்தில் நிலையான அரசியல் நிலவ பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மாறாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரத்தால் கா்நாடகம் பாதிக்கப்படும் நிலை உருவாகும்” என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

கா்நாடகாவில் தேர்தல் நெருங்கிய நேரத்தில் ஹிஜாப் சர்ச்சையை ஏற்படுத்தி பாஜக பெரும் கலவர நிலையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் லவ் ஜிஹாத் சர்ச்சையை ஏற்படுத்தி பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கர்நாடகாவில் சில படுகொலைகளும் நடந்தது. இப்படிபட்ட நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் ஏற்படும் என மிரட்டல் தொனியில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.