Politics

புல்வாமா தாக்குதல்: உள்துறை அமைச்சகமே காரணம்.. மோடி மீது குற்றம் சாட்டிய முன்னாள் ஆளுநருக்கு CBI சம்மன்!

2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து யாராலும் மறக்க முடியாது. தீவிரவாதி ஒருவன் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 44 சி.ஆர்.பி.எஃப் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிரவைத்தது.

இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து அப்போதே ஒன்றிய அரசுக்குப் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு அனைத்து கேள்விகளையும் மவுனமாகவே கடந்து விட்டது.அதனைத் தொடர்ந்து சமீபத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து எதுவும், பேசக்கூடாது என பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அப்போது ஜம்மு காஷ்மீருக்கு ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி வயர் இதழுக்காகக் கரண் தாப்பர் நடத்திய பேட்டி ஒன்றில் சத்யபால் மாலிக் பிரதமர் மோடி மீது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக பேசியிற் அவர், "2019ம் ஆண்டு நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மிகப்பெரிய தோல்வி. இந்த சம்பவம் நடந்தபோது உள்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் இருந்தார். அப்போது சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் செல்வதற்கு விமானம் கேட்டபோது உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. அவர்கள் சாலை மார்க்கமாகச் செல்ல ஆணையிடப்பட்டது.

ஆனால் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் செல்லும் பாதையின் பாதுகாப்பு திறம்படச் செய்யவில்லை. பின்னர் புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு பிரதமர் மோடி தன்னுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து அதிகம் பேசவேண்டாம் என அறிவுறுத்தினார்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இதே கருத்தைத்தான் தன்னிடம் கூறினார். இந்த சம்பவத்தில் பாக்கிஸ்தான் மீது பழியைச் சுமத்தி அரசாங்கத்திற்கும், பா.ஜ.கவிற்கும் தேர்தல் ஆதாயத்தைப் பெறுவதே நோக்கம் என்பதை நான் பின்னர் உணர்ந்தேன்.புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட RDX வெடிமருந்து பாகிஸ்தானிலிருந்து கார் மூலம் கொண்டு வரப்பட்டு 10 - 15 நாட்கள் காஷ்மீருக்கள் சுற்றித்திருந்தது உள்துறைக்குத் தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. இது மிகப்பெரிய தோல்வி" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த கருத்தை கூறிய சில நாட்களில் காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரு நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு 2,200 கோடி ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டதில் மோசடி நடைபெற்றதாகக் கூறி சத்யபால் மாலிக் மீது இரு வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த சத்யபால் மாலிக், காப்பீடு வழக்கில் சிபிஐ சில விளக்கங்களைக் கேட்டுள்ளதாகவும், அதுகுறித்து தான் பதிலளிப்பேன் எனக் கூறியிருந்தார்.

இதனிடையே சத்தியபால் மாலிக் டெல்லி ஆர்.கே புறத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை டெல்லி போலிசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

Also Read: காவல்நிலையம் முற்றுகை.. இந்திய அரசுக்கு எச்சரிக்கை.. ஒரு மாதமாக தேடப்பட்டுவந்த அம்ரித்பால் போலிஸில் சரண்!