Politics
நீதிபதிகளை விமர்சித்த வழக்கு.. நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரிய 'KASHMIR FILES' இயக்குநர் !
கடந்த ஆண்டு வெளியாகி சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படத்தை, வலதுசாரி அமைப்புகள் வெகுவாக பாராட்டுத் தெரிவித்து வரவேற்றன.
அதேநேரத்தில் வரலாற்றை திருத்தி அமைக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் இருப்பதாகவும், இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் மற்ற சில அமைப்புகள் குரல் கொடுத்தனர். சமீபத்தில் நடந்த கோவாவில் 53-வது சர்வதேச திரைப்பட விழாவில், சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழு தலைவரான நடாவ் லாபிட் “வெறுப்புணர்வைத்தூண்டும் மோசமான,இழிவான பிரச்சார படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்" என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக அந்த படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி சர்ச்சையில் சிக்கினார்.. பீமா கோரேகான் வழக்கில் யுஏபிஏ சட்டத்தின் கீழ் 70 வயதான சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கவுதம் நவ்லகாவை சிறையில் இருந்து எடுத்து வீட்டு காவலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது இந்த வழக்கில் நீதிபதி பாரபட்சம் காட்டியதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ட்வீட் செய்திருந்தார்.
இது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக எடுத்து விசாரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விவேக் அக்னிஹோத்ரி நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் விவேக் அக்னிஹோத்ரி தனது மன்னிப்பை அவர் நேரில் தெரிவிக்க வேண்டும் என்றும், பதில் மனுவின் மூலமாகவே மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர் . இந்த நிலையில், வேறு வழியின்றி இன்று நேரில் ஆஜரான அவர் நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையடுத்து நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!