Politics

ராகுல் காந்தி அலுவலக Phone, Internet இணைப்பு துண்டிப்பு: மேல்முறையீட்டுக்கு நடுவே BSNL நிறுவனம் நடவடிக்கை

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசினார்.

இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என கூறி குஜராத் முன்னாள் பாஜக அமைச்சர் புர்னேஷ் மோடி என்பவர் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதியும் ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெறவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி கடந்த மாதம் (மார்ச்) 24-ம் தேதி ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம்., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போரட்டங்கள் நடத்தினர். அதோடு இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு இது ஒரு ஜனநாயக படுகொலை எனவும் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டங்களும் செய்யப்பட்டது.

இந்த சூழலில் ராகுல் காந்தி டெல்லியில் வசிக்கும் தனது அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என உத்தரவு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி டெல்லியில் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய தயார் என மக்களவை செயலகத்துக்கு நேற்று கடிதம் அனுப்பி காலியும் செய்தார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதன் விசாரணையை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி அலுவலகத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த தொடர்பியல் சார்ந்த விஷயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் இருக்கும் ராகுல் காந்தியின் அலுவலகத்திற்கு BSNL இணைப்பு கடந்த பல் ஆண்டுகளாக கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது BSNL நிறுவனம் ராகுல் காந்தி அலுவலகத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்பு எண் 04936 209988, இன்டெர்நெட் உள்ளிட்ட சேவையை துண்டித்துள்ளது.

ராகுல் காந்தி பதவி பறிபோன சில நாட்களிலே BSNL நிறுவனம் இந்த செயலை செய்வது பலரது மத்தியிலும் பெரும் முகசுழிப்பையும் கண்டங்களையும் எழுப்பி வருகிறது.

Also Read: “உணவளிக்கும் நிலங்கள் நிலக்கரிக்காகத் தோண்டுவது வயிற்றில் அடிக்கும் செயல்..” - முரசொலி கடும் கண்டனம் !