Politics

MP பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. மோடியை விமர்சித்து 2 ஆண்டு தண்டனை பெற்றதால் நடவடிக்கை !

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மக்களைத் தேர்தல் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசியிருந்தார்.

இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் சர்ச்சையை எழுப்பினர். பிறகு குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வெள்ளியன்று நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து நேற்று இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கி தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அதோடு ராகுல் காந்திக்குப் பிணை வழங்கியது நீதிமன்றம்.ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமீன் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை அடுத்து "உண்மையே தன்னுடைய கடவுள் என்றும் அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே தன்னுடைய மதம்" என்று ராகுல் காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முக்கிய அரசியல் தலைவர்களும் ராகுலுக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ”சகோதரர் ராகுல் காந்தி போன்ற தலைவருக்கு அவதூறு குற்றச்சாட்டில் தண்டனை விதித்திருப்பது வருந்தத்தக்கது. அவருடன் பேசி எனது ஆதரவைத் தெரிவித்தேன். இறுதியில் நீதி வெல்லும் என்று நம்புகிறேன். எதிர்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இது போன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. சூரத் நீதிமன்றம் 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நிலையில், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இந்த தகவல் வெளியானதும் பல்வேறு தரப்பினர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கறுத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "எதை செய்யக் கூடாது என்பதை தென்னக ரயில்வே பயில்வது நல்லது": 100% இந்தி சுற்றறிக்கைக்கு மதுரை MP ஆவேசம்!