Politics

“எரிமலையைச் சீண்ட வேண்டாம்..” - JNU தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ABVP-க்கு கி.வீரமணி எச்சரிக்கை

டெல்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி-யினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.என்.யூ-வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பாக கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தி நடத்தியுள்ளனர். அப்போது கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.

அதோடு இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வாயிலாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (19.02.2023) இரவு திட்டமிட்டு, ஏபிவிபியால் பெரியார் படங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த ரவுடிக் கும்பலின் வன்முறையைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு பெரியாரிய ஆதரவு மாணவர் பிரவீன் இதே காவிக் கும்பலால் தாக்கப்பட்டு கால் உடைந்த நிலையில் இருக்கிறார் என்றும் தெரியவருகிறது. இந்த மாணவர்கள் ஜேஎன்யூவில் தொடர்ச்சியாக சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள். ‘’ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் சமூகநீதிக்கான மாணவர் அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

பல்கலைக் கழகத்திலேயே பெரியார் பிறந்தநாள், சட்ட எரிப்பு மாவீரர் நாள், புதுக்கோட்டை வேங்கைவயல் வன்கொடுமைகளை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து இயங்கியவர்கள்.

தமிழ்நாட்டு மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது பற்றி ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பல்கலைக்கழக நிர்வாகமும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. கூட்டத்துக்கு ஆதரவாகவே இயங்குகிறது.

தமிழ்நாடு அரசும், புதுடில்லியிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். டில்லி மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரின் கடமை.

டில்லியில் சட்டம் - ஒழுங்கு நிலை எப்படி சந்தி சிரிக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. இதற்கு முழுப் பொறுப்பேற்கவேண்டியவர் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷாதான்.

தந்தை பெரியார் ஒரு கட்சித் தலைவரல்ல - உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மகத்தான தலைவர். எரிமலையைச் சீண்ட வேண்டாம் - எச்சரிக்கை!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: JNU தமிழ் மாணவர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் : ABVP-யின் செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம்!