Politics

“பாஜகவை சேர்ந்தவர்களுக்கே ஆளுநர் பதவி..” - ஒன்றிய அரசை விளாசிய CPI தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா !

கோவையில் வடகோவை குஜராத் சமாஜ் கூட்டரங்கில் மாவட்ட பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிறகு டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜகவை சேர்ந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்படுகின்றனர். ஆளுநர்கள் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாகவே உள்ளனர். தற்போது ஆளுநர் என்பதற்கு பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறது.

தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒன்றும் புதியதல்ல. முன்னதாக இல.கணேசன், தமிழிசை செளந்தரராஜன் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆளுநர்களாக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கருத்துகள் தெரிவித்து வருவது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துக்கொண்டு பாஜகவிற்கு எதிராக நாட்டை பாதுகாக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றினைந்து தேசிய அளவில் செயல்பட வேண்டும்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் மதசார்பற்ற கட்சி என்பது நிராகரிக்க முடியாது. கட்சிகளிடையே முரண்பாடு இருந்தாலும், அதை கடந்து RSS மற்றும் பாஜகவை வீழ்த்த ஒன்றினைந்து நாட்டை காக்க பொதுநிலையுடன் செயல்பட வேண்டும்.

பாஜக ஆட்சியை பிடித்தவுடன் இடதுசாரிகள் வீழ்ந்து வருவது என்பதை தான் ஏற்கவில்லை. இடதுசாரிகளுக்கு தேர்தல் அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே தவிர, அரசியல் கொள்கையில் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கு நீடிக்கிறது.

அதனால்தான் சமீபத்தில் பிரதமர் மோடி, 'கம்யூனிசம் என்பது அபாயகரமான சிந்தாந்தம், அழிவை ஏற்படுத்தி விட்டு போய்விடும்' என்று சொன்னார். RSS சிந்தாந்ததற்கு நேரெதிராக இடதுசாரிகள் சிந்தாந்தம் உள்ளதால் பாஜகவின் இறுதிக்கட்ட இலக்கு என்பது இடதுசாரிகளாகவே இருக்கும். இருப்பினும், மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளது" என்றார்.

Also Read: ராஜஸ்தான் : 2.15 லட்சம் ரூபாய் நோட்டுகளை காலியாக்கிய கரையான்கள்.. வங்கி பெட்டகத்தை திறந்தபோது அதிர்ச்சி !