Politics

அனைத்துத் துறையிலும் தோல்வியடைந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. 14% அதிகரித்த ரொக்க பரிவர்த்தனை !

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, இரவு 8 மணியை இந்தியர்கள் யாரும் வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றுதான் கள்ள நோட்டை ஒழிக்கப் போவதாகக் கூறிய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அறிமுகப்படுத்தியபோது ரொக்கப்பணத்தை ஒழித்து டிஜிட்டல் பணத்துக்கு மாறுவோம். கருப்பு பணத்தை ஒழிப்போம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி கருத்து தெரிவித்தார்.

ஆனால், அதன்பின்னர் வந்த ஆண்டுகளில் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தையே சீரழித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட சில மாதங்கள் போதிய மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் ரொக்க பணம் கிடைக்காமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் அதன்பின்னர் பொருளாதார பிரச்சனையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வரும் காலங்களில் கருப்பு பணம் பதுக்கல் அதிகரித்த நிலையில், கள்ளநோட்டு புழக்கமும் அதிகரித்தது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் மோடி கூறியதற்கு எதிர்மாறாக ரொக்க பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரொக்கத்தின் மதிப்பு 17.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்.21ம் தேதி புழக்கத்தில் இருந்த ரொக்க மதிப்பு 30.88 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ரொக்கத்தின் அளவு ஜிடிபியில் 14.2% ஆக அதிகரித்துள்ளது.

பெருநகரங்களில் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொண்ட நிலையில், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்களை பொதுமக்கள் ரொக்கப்பரிவர்த்தனையே தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பாஜக மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை அனைத்து துறையிலும் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்பது தெரியவருகிறது.

Also Read: பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?