Politics

"ஆதாரமில்லாமல் காவல்துறை மீது அவதூறு பரப்பும் அண்ணாமலை".. கே.எஸ். அழகிரி கண்டனம்!

தருமபுரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ‌கே.எஸ். அழகிரி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி,"எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி முன்பு கைக்கட்டி, வாய்பொத்தி நின்றதைப்போல், தற்போதைய முதலமைச்சர் மு.க.‌ ஸ்டாலின் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை துணிவுடன் எதிர்த்து வருகிறார். இதனால்தான் தி.மு.க ஆட்சியின் மீது தொடர்ந்து பா.ஜ.கவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைக் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர். ஆனால்‌ அவர் அரசியல் கட்சியின் பிரதிநிதி போல் பேசி வருவது ஏற்புடையது அல்ல. அதேபோல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விளம்பரத்திற்காக அகில இந்தியத் தலைவர் போல் தன்னை நினைத்துக் கொண்டு பேசி வருகிறார்.

கோவை சம்பவத்தில் தமிழ்நாடு காவல் துறை வெகு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அரசியல் செய்யவே, காவல்துறை மீது தொடர்ந்து அவதூறாக ஆதாரமில்லாமல் கருத்துக்களை அண்ணாமலை பேசி வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "பெரிய பதவி வேண்டும் என்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகிவிடலாம்" -திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிக்கை!