Politics

சோனியா காந்திக்கு எதிர்ப்பு.. ரிஷி சுனக்குக்கு ஆதரவு.. எப்போது மாறப்போகிறார்கள் இந்த பா.ஜ.கவினர் ?

இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆரம்பத்தில் அதிக ஆதரவு பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த சுற்று செல்ல செல்ல ஆதரவை இழந்து வந்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் பழமைவாத கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.இவர் பதவியேற்றதும் அவர் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அரசு மக்களை விடுத்து பணக்காரர்களை வளர்த்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கட்சி தலைவரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட் ஆகியோர் இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு 100க்கும் குறைவாக இருந்த காரணத்தால் போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மார்டாண்ட் ஆகியோர் அடுத்தடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து விரைவில் இங்கிலாந்து (பிரிட்டன்) பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜக. வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அப்படி வாழ்த்து தெரிவிக்கும் சிலர்தான் கடந்த 2004-ம் ஆண்டு சோனியா காந்தி இந்திய பிரதமராக கடும் எதிர் தெரிவித்தனர். அதிலும் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே சோனியா காந்திக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தற்போது ரிஷி சுனக்குக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், "முதலில் கமலா ஹாரிஸ். இன்று ரிஷி சுனக். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்கள் தங்கள் நாடுகளின் பெரும்பான்மை இல்லாத குடிமக்களை அரவணைத்து அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இது இந்தியா மற்றும் பெரும்பான்மைவாத கட்சிகளும் கற்க வேண்டிய பாடம்." என்று பதிவிட்டுள்ளார்.

Also Read: திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த திருடன்.. பரபரப்பான பெங்களூரு.. நடந்தது என்ன ?