Politics

"துணை வேந்தர் விவகாரம்.. ஆளுநர் RSS-ன் கருவியாக செயல்படுகிறார்" -கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம் !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.

ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கேரளா, கண்ணூர், மகாத்மா காந்தி, காலடி சமஸ்கிருதம், அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இன்று காலை 11 மணிக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதே நேரம் தேர்வு குழுவின் பரிந்துரைப்படி பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமித்ததே ஆளுநர்தான் என்ற நிலையில், தற்போது அவரின் இந்த நடவடிக்கை அரசுக்கு எதிரான போக்காகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

ஆளுநரின் இந்த அடாவடி போக்குக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பேசியிற் அவர், ஆளுநர் ஆரிப் கான் துணை வேந்தர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, தனக்கு உள்ள அதிகாரங்களை விட அதிக அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார். இது ஜனநாயக விரோதமானது மட்டுமின்றி துணை வேந்தர்களின் அதிகாரத்தின் மீதான அத்துமீறல். ஆளுநர் பதவி என்பது அரசுக்கு எதிராக செயல்படுவதற்கல்ல, அரசியலமைப்பின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்காக செயல்படுவது. ஆனால் ஆரிப் கான் ஆர்எஸ்எஸ்-ன் கருவியாக செயல்படுகிறார்" என விமர்சித்துள்ளார்.

Also Read: “கணவரும், வளர்ப்பு மகனும்.. என்னை கருணைக்கொலை செய்யுங்கள்” : குடியரசுத் தலைவருக்கு பெண் உருக்கமான கடிதம்!