Politics

“ஒருபக்கம் இந்தி திணிப்பு.. மறுபக்கம் மாநில மொழிகளை ஆதரித்து பேச்சு” : அமித்ஷாவின் இரட்டை வேடம் அம்பலம் !

எதிரொலி

"இந்திய அறிவாற்றலை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டுமானால் மாநில மொழிகளை மேம்படுத்திட வேண்டும். 95 சதவிகிதம் பேர் தொடக்க நிலைக் கல்வியை அவரவர் தாய்மொழியிலே தான் பெறுகின்றார்கள்" என்று பேசியிருப்பவர் வேறுயாருமல்ல; ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களேதான்!

அது மட்டுமா? “சட்டக் கல்வி, மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி ஆகியவை இந்திய மாநில மொழிகளிலேயே கற்பிக்கப்பட வேண்டும். ஆராய்ச்சியும், வளர்ச்சியும், தாய்மொழியின் மூலமே சாத்தியப்படும்" என்றும் அமித்ஷா அவர்கள் கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு, சாட்சாத் இதே அமித்ஷா அவர்கள், ஒரே நாடு, ஒரே மொழி; இந்தியாவுக்கு இந்தி மொழி மட்டுமே என்று கூறவில்லையா? அவருடைய அந்தக் கூற்றுக்கு பலத்த எதிர்ப்பு எழவில்லையா? இப்போது என்ன அமித்ஷா, புதிதாக மனமாற்றம் அடைந்து விட்டாரா?

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகப் பேசி, மாநிலங்களின் மீது அதைத்திணிக்க, ஓர் உத்தியாக மாநில மொழிகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறார்; அவ்வளவு தான்.

தமிழகத்தில் இந்தியை கட்டாயப் பாடமாக்கிய மூதறிஞர் இராஜாஜி அவர்கள், பின்னர் மனமாற்றம் பெற்று, 1965-ஆம் ஆண்டில், ஆங்கிலத்திற்குப்பதிலாக இந்தி இணைப்பு மொழி' என்பதைவன்மையாகக் கண்டித்து, எதிர்த்தார்; இந்தியா பிளவுபட்டுப் போகும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

அப்படிப்பட்ட இராஜாஜி எங்கே? பா.ஜ.க.வின் அமித்ஷா எங்கே ? எத்தனை ஏணிகளை வைத்தாலும் எட்டவே இயலாது!

- முரசொலி

Also Read: இந்தி திணிப்பு : "இல்லாத கருப்புப் பூனைகள் அல்ல, இருக்கும் காவிப் பூனைகள்.." -தமிழிசைக்கு முரசொலி பதிலடி!