Politics

தேசிய அரசியலில் தி.மு.க: டெல்லியில் அழுத்தமாக பதிவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்-PTI-க்கு சிறப்பு பேட்டி!

“தமிழ்நாட்டில் தி.மு.கவுடன் இருப்பது போல, அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கொள்கை ரீதியான நட்புறவை வளர்க்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்றுள்ள தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான PTI-க்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.

அந்தப் பேட்டியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியவற்றை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அனைவரும் தங்கள் தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவிட்டு இந்தியாவை காக்க ஒன்றுபட வேண்டும்.

மாநில அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தேசிய அரசியல் என்பது மாநில அரசியலின் கலவையாகும். எனவே, இரண்டையும் பிரிக்க முடியாது.

தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக தி.மு.க உள்ளது. நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக உள்ளது. நாட்டின் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது தி.மு.க.

பா.ஜ.கவை எதிர்ப்பது அரசியல் கட்சியின் மீதான தனிப்பட்ட வெறுப்பு அல்ல. அப்படி நினைக்க வேண்டாம். நாங்கள் பா.ஜ.கவின் கொள்கைகளை விமர்சிக்கிறோம், தனிப்பட்ட நபர்களை அல்ல. எங்கள் விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவை. நாங்கள் அதை என்றென்றும் செய்வோம். எந்தச் சூழலிலும் செய்வோம்.

காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.கவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.கவை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க உடன் இருப்பதுபோல் பிற மாநிலங்களில் உள்ள கட்சிகளுடனும் காங்கிரஸ் நட்புறவை வளர்க்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மாணவிகள் சொன்னதைக் கேட்டு கலகலவென சிரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்” : டெல்லி மாதிரி பள்ளியில் ருசிகரம்!