Politics

”பாஜகவுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” - திமுக அமைப்புச் செயலாளர் R.S.பாரதி பேட்டி!

திமுகவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரும் தற்போதைய இணை அமைச்சருமான L. முருகன் மீதான அவதூறு வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கில் திமுக அமைப்பு செயலாளர் R.S பாரதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது, ”எல்.முருகன் தேசிய பட்டியலின பழங்குடியின ஆணையத்தின் தலைவராக இருக்கும் போதே முரசொலி கட்டடம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவரிடம் காட்டியதுண்டு. இருப்பினும் அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதை உணர்ந்து இவர் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் பாஜக அவதூறாக பேசி அறிக்கை வெளியிட்டது. இவர்களில் ஒருவரான எல்.முருகன் 2020 டிசம்பர் 28 அன்று வேலூரில் முரசொலிக்கு அவதூறு ஏற்படும் வகையில் அவதூறாக பேசினார். மேலும் எல்.முருகன் திமுக மீது அவதூறு கருத்துகளை தொடர்ந்து பேசி வந்தார். இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு திமுக சார்பில் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது அதற்காக ஆஜராகி விளக்கம் அளித்தேன்.

பாஜகவில் ஏதேனும் பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முரசொலி கட்டடத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையில் எல்.முருகன் பேசினார். முரசொலி அலுவலக மூலப்பத்திரத்தின் அனைத்தும் ஆவணங்களும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு அச்சப்பட வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. வழக்கில் நல்ல முடிவு எட்டப்படும்." எனக் கூறியுள்ளார்.

Also Read: ”சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு இருக்கும்”: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் உறுதி!