Politics

"அவதூறாக ட்விட்டர் பதிவு": ரூ.500 கோடி கேட்டு அண்ணாமலை மீது BGR நிறுவனம் நஷ்ட ஈடு வழக்கு!

தமிழ்நாடு மின்வாரியத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு ரூ.500 கோடிக்கு மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இவரின் குற்றச்சாட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துள்ளார். மேலும் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து முறைகேடுகளுக்கான ஆதாரத்தை காட்டுவதற்கு பதில் மின்சார வாரியம் சார்பில் வழங்கப்பட்ட பண பட்டுவாடா விவரங்களை வெளியிட்டுக் குற்றச்சாட்டு நடந்துள்ளதுபோல் அண்ணாமலை கூறினார். மேலும் BGR நிறுவனத்தை சம்பந்தப்படுத்தியும் பேசினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தபோது,"BGR நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றம் சென்று வழக்காடி ஒப்பந்தப்படி பணியை ஆரம்பிக்க இருக்கிறது. இது புது ஒப்பந்தமில்லை. பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கூட்டணியாய் இருந்தபோதே நிகழ்ந்த ஒப்பந்தம்.

ஒப்பந்த தொகையும் எடப்பாடி அரசு நிர்ணயம் செய்ததே. முழுக்க முழுக்க அ.தி.மு.க ஆட்சியில் நடந்த நிகழ்வுகள். தெரிந்து சொல்லுங்கள் அல்லது தெரிந்து கொள்ளுங்கள். இருவரது நேரத்தையும் வீணடிக்காதீர்கள்."என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பி.ஜி.ஆர் நிறுவனம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அண்ணாமலைக்கு இது தொடர்பாக வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

இதில்,"BGR நிறுவன இயக்குநர் ரமேஷ்குமார் குறித்து ட்விட்டரில் அவதூறாகப் பதிவிட்டு அவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதால் 500 கோடி ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Also Read: தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய வழிமுறைகளை வெளியிட்டது மின்சாரத்துறை!