Politics

கொடநாடு: Gate-ல் இருந்து நடந்தே சென்று ஆய்வு; தீவிர விசாரணையில் இறங்கிய தனிப்படை -இன்றைய விசாரணை நிலவரம்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மறுவிசாரணை கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் துணை காவல் கண்காணிப்பு சுரேஷ், கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் சயான், கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனையடுத்து கொடநாடு மேலாளர் நடராஜனிடம் நேற்று (செப்.,3) முதல் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது போலிஸாரின் கேள்விகளுக்கு நடராஜன் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளது போலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது உடனடியாக ஆஜராக வேண்டும் எனவும் காவல்துறையினர் நடராஜனுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க மேலும் 4 தனிப்படைகளை அமைத்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், புதிதாக அமைத்த தனிப்படையில் ஒரு குழுவைச் சேர்ந்த மூன்று காவல் அதிகாரிகள் கொடநாடு பங்களாவின் 8,9,10 ஆகிய நுழைவு வாயில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் எஸ்டேட் மேலாளர் நடராஜ் உடன் இருந்த நிலையில், எஸ்டேட் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பார்வையிட்டனர். அப்போது தற்கொலை செய்துகொண்ட கணினி பொறியாளர் தினேஷின் அறையையும் பார்வையிட்ட தனிப்படை போலீசார், நுழைவுவாயிலில் இருந்து பங்களாவிற்கு நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே இன்று காலை கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் மைத்துனர் தினேஷ் ஆகியோரை கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை.

கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை, விசாரணை அலுவலகமாக இன்று திறந்தனர்.

Also Read: “கொடநாடு கொள்ளைக்காக அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற தகிடுதத்தங்கள்” : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொன்தோஸ்!