Politics

“கொங்கு மண்டலம் தி.மு.க-வின் கோட்டையாக மாறும்” - அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோவிந்தராஜன் பேட்டி!

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தஞ்சாவூர், தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் தி.மு.கவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

2001-2006 காலகட்ட அ.தி.மு.க ஆட்சியின் போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன் தி.மு.கவில் இணைந்தார். அவருடன் அவரது மகனும் அ.ம.மு.க மாவட்ட செயலாளருமான வ.து.ந.ஆனந்த் உள்ளிட்டோரும் தி.மு.கவில் தங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.

அதேபோல் அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோவிந்தராஜன் தி.மு.கவில் இணைந்தார். அவருடன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினரும் தி.மு.கவில் இணைந்தனர்.

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், முத்துசாமி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர்கள், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு மற்றும் தி.மு.க துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோவிந்தராஜன், “ஈரோடு மாவட்டத்திலிருந்து அ.தி.மு.க, அ.ம.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளிலிருந்து 2250 பேர் முதலமைச்சர் முன்னிலையில் இன்று தி.மு.கவில் இணைந்துள்ளோம்.

கொங்கு மண்டலத்தில் திருப்புமுனையாக இது அமையும். இது முதற்கட்டம் தான். கொங்குமண்டலம் தி.மு.கவின் கோட்டையாக மாறும். அ.தி.மு.க-வின் எதிர்காலம் முடிந்துபோன கதை. அ.தி.மு.க தனது தனித்தன்மையை இழந்து விட்டது” எனத் தெரிவித்தார்.

Also Read: “பெருந்தன்மையா விட்டுக் கொடுத்துடுங்க ப்ளீஸ்” : சசிகலாவிடம் கெஞ்சிக் கேட்ட ஜெயக்குமார்!