Politics

“பெருந்தன்மையா விட்டுக் கொடுத்துடுங்க ப்ளீஸ்” : சசிகலாவிடம் கெஞ்சிக் கேட்ட ஜெயக்குமார்!

அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்குச் சென்றார்.

அதேநேரத்தில் சசிகலாவும் மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார். சசிகலா வருகையை அடுத்து மருத்துவமனையில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாகக் கிளம்பியுள்ளார்.

சசிகலா, அ.தி.மு.கவைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்களிடம் தொலைபேசியில் உரையாடி வரும் நிலையில், அ.தி.மு.கவை சசிகலா கைப்பற்றப்போவதாக சசிகலா தரப்பு கூறிவருகிறது.

தன்னிடம் எம்.ஜி.ஆர் கருத்துக் கேட்பார் என்றும், அவருக்கு தான் ஆலோசனை கூறியதாகவும் சசிகலா தொண்டர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியானது. இதுகுறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறிய சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அ.தி.மு.கவை வீழ்த்த முடியாது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்தபோதே சசிகலாவும் அங்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா அ.தி.மு.க கொடி கட்டிய காரில் பயணித்து வருவதும் அ.தி.மு.க தலைமைக்கிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.கவோடு எந்த உரிமையும் இல்லாத சசிகலா, காரில் அ.தி.மு.க கொடியைக் கட்டுவது தேவையற்றது.

பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுக்கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக தடையாக இருக்கக் கூடாது. ஜெயலலிதா தலைமையேற்க வி.என்.ஜானகி விட்டுத்தந்ததுபோல் சசிகலா விட்டுத்தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.