Politics

“ஆளுமையை ஒப்பிட்டுத்தான் பேசினேன்; வெட்டி ஒட்டப்பட்ட வீடியோவுக்கு நான் பொறுப்பேற்க முடியாது“ : ஆ.ராசா

அரசியல் ஆளுமையை குறிப்பிட்டு ஒப்பிட்டுப் பேசியதை வேண்டுமென்றே சிலர் சமூகவலைதளங்களில் தவறாகப் பரப்பி வருவதாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி விளக்கமளித்துள்ளார்.

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் பழனிசாமி பற்றி தரக்குறைவாகப் பேசியதாக, உள்நோக்கத்துடன் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் எதிர்தரப்பினரால் பரப்பப்பட்டது.

இந்நிலையில், இன்று பெரம்பலூரில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேயர், எம்.எல்.ஏ., உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று படிப்படியாக தி.மு.க.வில் வளர்ந்து வந்தவர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் கட்சி தலைமையிடத்துக்கு வந்தவர்.

இதுபற்றி ஒப்பிட்டு நான் உவமைக்காகக் கூறியதை சிலர் சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே வெட்டி, ஒட்டி வதந்தி பரப்பி வருவதாக அறிகிறேன். அதுமுற்றிலும் தவறானது. அவரை களங்கப்படுத்தும் வகையில் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

உள்நோக்கத்தோடு நான் எதையும் பேசவில்லை. இருவரின் அரசியல் ஆளுமையை குறிப்பிடுவதற்காக அந்த ஒப்பீடு நடந்தது. அதை தவறாக புரிந்துகொண்டால் அதற்காக நான் பொறுப்பேற்க முடியாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என விளக்கமளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also Read: "பாஜகவுடன் கூட்டணி அமைத்தும் அவர்களின் லட்சியம் நிறைவேறவிடாமல் கட்டுப்படுத்தியது தி.மு.க”- ஆ.ராசா பேச்சு!