Politics

நண்பர்களை வரவேற்க ‘அந்த’ சைகைதான் காட்டுவீங்களோ?-ஆபாச சைகை காட்டி போலிஸிடம் மாட்டிய அதிமுக பிரமுகர் மகன்!

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் முன்னாள் நகராட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க பிரமுகருமான கோபாலகிருஷ்ணன் தற்போது உணவகம் நடத்தி வருகிறார். அவரது மகன் ஸ்ருஜித் கிருஷ்ணா.

நேற்று (செப்.,6) ஏடிசி பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே முகக்கவசம் அணியாமல் வரும் வாகனங்களை மடக்கி போலிசார் அறிவுறுத்தி வந்திருக்கிறார்கள்.

அச்சமயத்தில், அ.தி.மு.க கொடி பொறுத்தப்பட்ட காரில் இருந்த கோபாலகிருஷ்ணனின் மகனும், அவரது நண்பரும் முகக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் இருந்திருக்கிறார்கள்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறி சர்க்கிளில் வலப்புறமாகச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனைக்கண்ட போலிஸ் ஒருவர் வாகனத்தை நிறுத்த முயற்சித்திருக்கிறார்.

ஆனால், காரை நிறுத்தாமல் சென்றதோடு, போலிஸ் அதிகாரியை பார்த்து ஆபாசமாக கை விரலை காட்டியுள்ளார். இதனை உடனிருந்த போலிஸ்காரர் தமது செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறார்.

இதனையடுத்து இந்த நிகழ்வு தொடர்பாக போலிஸாரே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் காவல்துறை உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதோடு அந்த இளைஞர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள அ.தி.மு.க பிரமுகர் கோபாலகிருஷ்ணன், “திருப்பூரில் இருந்து வந்த நண்பர்களை வரவேற்பதற்காக கையை காட்டியிருப்பார்கள். அதற்கு என் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக போலிஸாரை அவமதித்ததாக விஷயத்தை பெரிதாக்குகிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

Also Read: இரு மொழிக்கொள்கை எனக்கூறும் அதிமுக அரசு இந்திக்கு வெண்சாமரம் வீசுவது ஏன்? - கேள்விகளால் திமுக MLA விளாசல்