Politics

ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஜாமீனை ரத்து செய்வதில் இவ்வளவு அக்கறை ஏன்? - அ.தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., க்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய இந்த அரசு அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கத்தில் பேசியது தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,க்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் இந்த வழக்கில் ஆர்.எஸ் பாரதி எம்.பி., கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கில் ஜூன் 1ம் தேதி சரணடைந்த ஆர்.எஸ்.பாரதி எம்.பி., க்கு ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Also Read: "உங்கள் ‘அம்மா’வையே ஆட்டம் காண வைத்தவர் ஆர்.எஸ்.பாரதி" - எடப்பாடி பழனிசாமியை விளாசிய மு.க.ஸ்டாலின்!