Politics

யார் இந்த எல்.முருகன்? - தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தீண்டாமைக் கொடுமையை ஆதரித்தவர் புதிய பா.ஜ.க தலைவர்?

தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் என்பவர் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராகப் பதவியேற்றார். இதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழக பா.ஜ.க தலைவர் பதவி காலியாக இருந்துவந்தது.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவராக பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில், மூத்த வழக்கறிஞர் எல்.முருகன் என்பவரை நியமித்துள்ளார் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

எல்.முருகன், உலகளவில் மருத்துவத் துறையில் முன்னேற்றமடைந்து - இந்தியாவில் மருத்துவ சுற்றுலா மையமாகத் திகழும் தமிழகத்தை மத்திய பிரதேசத்தோடு ஒப்பிட்டு, நீட் தேர்வு அவசியம் எனக் கருத்துக் கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பல்வேறு விவகாரங்களில் அவரது செயல்பாடுகள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவே இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018ம் ஆண்டில் திருப்பூர் அருகே அழகுமலை கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் பள்ளிகளுக்குச் செல்ல, குடிநீர் எடுக்கச் செல்ல வகையின்றி ஆதிக்க சாதியினர் தீண்டாமை வேலி அமைத்தனர். ஜனநாயக அமைப்பினரின் கடும் போராட்டங்களுக்குப் பிறகு அந்தத் தீண்டாமை வேலி அகற்றப்பட்டது.

இதையடுத்து, பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் தீண்டாமை வேலி அமைக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இரு தரப்பு மக்களிடமும் முறையாக கருத்துக் கேட்காமல், தீண்டாமை வேலி அமைத்த ஆதிக்க சாதியினரை மட்டும் கோவிலுக்குள் அமரவைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

தீண்டாமை வேலி அகற்றப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட எல்.முருகன், வேலி அகற்றப்பட்ட இடத்தில் ஒரு கேட் அமைத்துக் கொள்ளலாம் என்றும், அதைப் பகலில் மட்டும் திறந்து வைத்துவிட்டு, இரவில் மூடிக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.

அகற்றப்பட்ட தீண்டாமை வேலியைக் கேட் போட்டு, வேறு வடிவில் தீண்டாமை வேலியை அமைக்க அறிவுறுத்தியவர் தான் இந்த பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய துணைத்தலைவர் தான் இந்த எல்.முருகன்.

இந்தியாவில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வயப்படுத்தி திருமணம் செய்து, பின்னர் அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள் என்கிற மத அடிப்படைவாதிகளின் கருத்தை ஆதரிக்கும் விதமாக லவ் ஜிகாத் தமிழகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது எனும் கருத்தை உதிர்த்தவரும் இவரே.

Also Read: “பொருளாதாரத்தை சீரமைக்காமல் மதவெறியைத் தூண்டுகிறார் பிரதமர் மோடி” - பா.ஜ.க அரசை விளாசிய ஜப்பான் நாளேடு!