Politics

”எம்.ஜி.ஆருக்கும் விபூதி அடித்த அ.தி.மு.க” : சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு!

சமீபத்தில், அய்யன் திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசி பா.ஜ.க-வினர் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சைக்குள்ளானது. பா.ஜ.க-வினரின் இத்தகைய செயலுக்கு தமிழகம் முழுக்க எழுந்த கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி பூசியுள்ளனர் அ.தி.மு.க-வினர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தனது சிறப்பான பங்களிப்பைச் செய்த சத்துணவு திட்டத்தை இந்துத்வா கும்பலிடம் தாரைவார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அ.தி.மு.க அரசு. இந்நிலையில், எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க-வினரே காவி பூசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலிகுப்பம் கிராமத்தில் எம்.ஜி.ஆர் சிலை ஒன்று உள்ளது. பல ஆண்டுகளாக அதில் வெள்ளை சாயம் அடிக்கப்பட்டிருந்த நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்ததினத்தை முன்னிட்டு, சிலையை அ.தி.மு.க நகர செயலாளர் ஓ.சி.முருகன் தலைமையில் தூய்மைப்படுத்தி மேற்சட்டைக்கு காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாத காலமாக இந்த கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை காவி நிறத்தில் காணப்பட்டு வருகிறது. இந்த சிலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

பா.ஜ.க-வின் தமிழக பிரிவாகவே செயல்பட்டு வரும் அ.தி.மு.கவினர், பா.ஜ.கவினரை மிஞ்சும் அளவுக்கு காவி வெறியோடு செயல்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: காவி உடையில் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்த வெங்கைய நாயுடு; தி.மு.க. எதிர்ப்பால் நீக்கம்!