Politics

"மோடி அரசுக்கு எதிராக கொடி உயர்த்தும் மம்தா" : சி.ஏ.ஏ-வை எதிர்க்கும் நான்காவது மாநிலமானது மேற்கு வங்கம்!

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். அதேபோல குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

அதேநேரத்தில், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தனது சட்டசபையில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றியது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் அந்த தீர்மானம் வலியுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும், ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து நான்காவது மாநிலமாக குடியரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிறுபான்மையினர் மட்டுமல்ல, அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முன்னெடுத்து சென்ற இந்து சகோதரர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்குவங்கத்தில், சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி. ஆகியவற்றை அனுமதிக்க மாட்டோம். அமைதியான முறையில் தொடர்ந்து போராடுவோம். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.” எனத் தெரிவித்தார்.